- °C
Are You a business owner?
List Your Business / ADஆனித் திருமஞ்சன உற்சவம்: நடராஜர் கோயில் தேரோட்டம்
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தேரோட்டம் வியாழக்கிழமை (ஜூலை 11) நடைபெறுகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்ச தரிசன உற்சவம் கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்படி, செவ்வாய்க்கிழமை தங்க கைலாச வாகன வீதியுலா, புதன்கிழமை தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதியுலா நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வியாழக்கிழமை (ஜூலை 11) நடைபெறுகிறது.
சித் சபையில் வீற்றுள்ள நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் உற்சவ மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெறும்.
தொடர்ந்து, இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும், வெள்ளிக்கிழமை (ஜூலை 12) அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகமும் நடைபெறும். பின்னர், காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதியுலா வந்த பிறகு பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித் சபை பிரவேசமும் நடைபெறும். சனிக்கிழமை (ஜூலை 13) பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம்
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன உற்சவத்தையொட்டி, கனக சபையில் நின்று பக்தர்கள் புதன்கிழமை காலை சுவாமி தரிசனம் செய்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன உற்சவம் கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை (ஜூலை 11) தேரோட்டமும், வெள்ளிக்கிழமை (ஜூலை 12) அதிகாலை மகா அபிஷேகமும், பிற்பகல் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவமும் நடைபெறும்.
மேற்கண்ட இரண்டு நாள்கள் மூலவர் நடராஜப் பெருமானும், சிவகாமசுந்தரி அம்பாளும் உற்சவத்துக்காக சித் சபையிலிருந்து வெளியே வருவதால் பூஜை முன்னேற்பாடுகள் கருதி கனக சபையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஜூலை 10,11,12,13 ஆகிய தேதிகளில் அனுமதியில்லை என்று பொது தீட்சிதர்களால் நடத்தப்பட்டு வரும் கோயில் நிர்வாகம் தெரிவித்தது.
ஆனித் திருமஞ்சன உற்சவத்தின் போது, கனக சபையில் நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் வழக்கு தொடுத்தார். இதில், கனக சபையில் நின்று சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை ஏதும் இல்லை என்று உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இந்த நிலையில், நடராஜர் கோயிலில் புதன்கிழமை காலை 8.30 மணி முதல் திருச்சோபுரநாதர் கோயில் செயல் அலுவலர் மகேஸ்வரன், விருத்தகிரீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் மாலா ஆகியோர் மேற்பார்வையில், கோயில் பொது தீட்சிதர்கள் அனுமதியுடன், பக்தர்கள் கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இதன் காரணமாக கோயில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Copyrights © 2024 . All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.